Thursday, October 11, 2012

315

ஓம் சத்குரவே சரணம்
நான் குருதேவரிடம் ஒரு நாள், "ஐயா, யாரோ ஒருவர் நம் ஜீன் ஹாப்டிடம் (Gene Haupt) 'ஒருவனுக்கு அருள் கிட்டுவது, கிட்டாமல் போவது எல்லாம் கடவுளின் விளையாட்டு' என பகவான் ராம கிருஷ்ணர் உரைத்ததாகக் கூறியுள்ளார். அதைக் கேட்டு ஜீன் மிகக் கலக்கமடைந்துள்ளார். ஜீன் இதற்கு அர்த்தம் செய்து கொண்டுள்ள விதம் பின்வருமாறு: ஒருவன் பல வருடங்களாக ஆன்மீகப் பயிற்சி செய்தும் எந்தவொரு பயனையும் அடையாமல் போகலாம், ஆனால் கடவுள் வேறு ஒரு காரணமுமின்றித் தன்னிஷ்டத்திற்கு ஒரு குடிகாரனுக்குக் கூட அருள் புரியலாம்.

குருதேவர் இந்த விளக்கத்தைக் கேட்டவுடன் முகம் சுளித்துக் கீழ்க்கண்டவாறு பதிலளித்தார், "ஸ்ரீ ராமகிருஷ்ணர் இவ்வாறு ஒரு போதும் கூறியிருக்க மாட்டார்! ஆகமங்களையும், அனுபூதி பெற்றவர்களின் உபதேசங்களையும் அரைகுறை ஞானம் உடையவர்கள் விளக்கம் செய்து கொள்ள முற்படும்போது இப்படித் தான் ஆகும். கடவுள் தன்னிசைக்குத் தாறுமாறாகச் செயல்படும் ஒரு ஜன்மமல்ல! சில சமயத்தில் அவர் செயல் விளையாட்டாகக் கூட மற்றவர்களுக்குத் தோன்றலாம். ஏனென்றால், மக்கள் பழைய கர்ம வினைகளின் விளைவுகளை அறியாத காரணத்தால். கடவுள் எப்போதுமே நியதிக்குட்பட்டுத் தான் செயல்படுவார். நியதியை ஆக்குவித்தவரே கடவுள் தான்: அப்படியிருக்க, ஏன் அவர் அதற்கெதிராகச் செயல்பட வேண்டும்? ஹாப்டிடம் அவன் இந்த விஷயத்தை மிகத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளான் என்று நான் கூறியதாகச் சொல்."

"நான் அவனிடம் கூறுகிறேன்" என்று நான் பதில் சொன்னேன். சற்றுப் பொறுத்து, "ஐயா, தயவு செய்து நீங்களே ஏன் ஜீனிடம் பேசக் கூடாது? அவன் சில காலமாகவே கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கிறான்" என்று உரையாடலைத் தொடர்ந்தேன்.

அதற்குக் குருதேவர் ஒருவித விரக்தியுடன், "என்ன செய்வது, நம் சங்கத்தை சாத்தான் சோதனைக்கு உட்படுத்துகிறான்; ஜீன் அதற்கு ஒரு விலக்கல்ல," எனப் பதிலளித்தார்.

"ஓ, அது தானா விஷயம்? ஏதோ ஒன்று நம் சங்கத்தினரைக் கஷ்டத்தில் தள்ளுவது போல் தெரிகிறது," என்று நான் சொன்னேன்.

குருதேவர் வருத்ததுடன், "ஆமாம், இன்னும் பல தலைகள் உருளும்," எனப் பகர்ந்தார்.

"ஐயா, இது நீண்ட காலம் தொடருமா?" என்று கேட்டேன்.

"ஆமாம்," என்று கூறி, குருதேவர், மேலும் தொடர்ந்து, "இது அந்தப் பையன், ஜேன் (Jan), என்சினிடாஸ் ஆச்ரமத்தில் இருந்து விலகிய போது ஆரம்பித்தது. அப்புறம் ஸ்மித் (Smith) வெளியேறினான். இன்னும் பல பேர் செல்வார்கள்," என்று முடித்தார்.

‪#‎Conversations‬ with Yogananda 315 by Swami Kriyananda
Tamil Translation: D.l. Sivakumar

ஓம் தத் ஸத்

பிரம்மார்ப்பணமஸ்து.

No comments:

Post a Comment