Monday, September 21, 2015

087


ஓம் சத்குரவே சரணம்

ஒருமுறை குருதேவர், "மிகச் சில மகான்களே முடிந்த முடிவான முக்தியை (final liberation) அடைந்துள்ளார்கள்"  என்னும் விஷயத்தைக் கூறினார்.

அவர் கூறிய விஷயம் எனக்குப் புதிராக இருந்தது. நான் உறுதி செய்து கொள்ள, "[உங்கள்] சுயசரிதத்தில் (Autobiography of a Yogi) குறிக்கப் பட்ட பல மகான்களின் நிலை என்ன? அவர்கள் இறந்து, சென்ற பிறகு, மீண்டும் மறுபிறவி எடுத்திருப்பார்களா?" எனக் கேட்டேன்.

[யோகியின் சுயசரிதத்தில், பரமஹம்ச யோகானந்தர் முடிவான முக்தி நிலையைப், பொதுவாக இந்த ஸ்தூல லோகத்திலிருந்து அல்லாமல், உயர்ந்த சூக்ஷும லோகங்களிளிருந்து அடைகிறார்கள் என்று குறித்துள்ளார். எனக்கு அப்போது இந்த முடிவான நிலையை எட்டுவது மிகவும் அரியது என்றே தோன்றிற்று.]

குருதேவர் அதற்கு, "அந்நூலில் குறிக்கப்பட்ட மகான்களிலும், மிகச் சிலரே  முடிந்த முடிவான முக்தியை அடைந்துள்ளார்கள்"  என்று பதிலளித்தார்.

நான் அந்நூலில் குறிக்கப் பட்ட சில மகான்களின் பெயரை ஒவ்வொன்றாகச் சொல்லி அவர்கள் முடிவான நிலையை அடைந்துள்ளார்களா? என்று வினவினேன். ஒவ்வொரு முறையும், அவரது பதில், "இல்லை, இல்லை" என்றே வந்தது.

கடைசியாக அவரே தொடர்ந்து, "பாபாஜீ, லாஹிரி மகாசாயர், ஸ்ரீ யுக்தேஷ்வர்ஜீ, லாஹிரி மகாசாயரின் இரு சீடர்கள்: சுவாமி பிரணாபானந்தா மற்றும் ராம் கோபால் முசும்தார் மட்டுமே அந்த நிலையை அடைந்துள்ளார்கள்,"   என்று பதிலளித்தார்.

இந்த உரையாடலின் போது, தன்னுடைய பெயரை இப்பட்டியலில் சேர்க்கவில்லை. ஆனால், பிற சமயங்களில், அவர் இந்தப் பிறவிக்கு முன்னரே முடிவான முக்தியை தான் அடைந்துவிட்டதாகக்  கூறியிருக்கின்றார்.

மேலும் அவர் கூறினார், "நான் முடிவான முக்தியடைந்த மற்றொருவரைச் சந்தித்து உள்ளேன். அவர் பெயர் யோகி ராமைய்யா. அவர் மாபெரும் ஞானியான ரமண மஹரிஷியின் சிஷ்யர். அவ்வப்போது, ஒரு சில சமயம், குருவைக் காட்டிலும் சிஷ்யர் ஆன்மீக ரீதியில் உயர்ந்த நிலை அடைவதுண்டு."

(நான் [ஸ்வாமி க்ரியானந்தா] 'யோகி ராமைய்யா 'அவர்களை  1960ஆம் ஆண்டு சந்தித்தேன். அவர் 'ஸ்ரீ ராம யோகி' என்ற பெயரால் அப்போது அழைக்கப் பட்டார். அவரைப் பற்றி மேலும் இந்நூலில் பின்னர்க் குறித்துள்ளேன்.)

"ஒரு ஞானி, 'கடவுளும் நானும் ஒன்று' என்ற ஐக்கியத்துவத்தை, உணர்ந்த கணமே ஏன் அவருடைய கர்மபலன்கள் மறைவதில்லை?" என்று வினவினேன்.

"அந்த நிலையில் அவற்றை ஒரு பொருட்டாகக் கருதுவது இல்லை. அவை எல்லாமே ஒரு கனவு போலத் தோன்றும். அந்நிலையிலேயே ஒரு சில ஜன்மாக்கள் கூட எடுக்க நேரலாம். அப்படி இப்பூவுலகில் பிறப்பெடுத்து  அவர்களின் சிஷ்யர்கள் முக்தி பெற உதவுவார்கள்.  இப்படி மேனிலையை அடைந்த மஹான்கள், பிறரை மேம்படுத்தும் நோக்குடன், திரும்பப் பிறக்கத் துளியளவு பூலோக கர்மாவை வேண்டுமென்றே கூட தக்க வைத்திருப்பார்கள்." 

"உயர்வான 'நிர்விகல்ப ஸமாதி' நிலையை அடைந்தபின், புதிதாகக் கர்மாவைச் சேர்க்கும் அஹங்கார போதம் இருக்காது. அது முக்திக்கு ஈடான  ஒரு நிலையே."

"முடிவான முக்தியை அடைந்த பின்னரும் இப்பூவுலகில் திரும்ப அவர்கள் அவதரிக்க என்ன காரணம், குருதேவா?" என்று கேட்டேன்.

"பிறருக்கு உதவ வேண்டும் என்ற அவர்களின் 'பற்றற்ற ஆசை' (Desireless Desire) தான்!" என்று பதில் அளித்தார்.

அவருடைய Home Study Lessons (கரஸ்பாண்டென்ஸ்) பாட நூலில், கர்ம வினைகளில் இருந்து முற்றும் விடுபட்ட ஒரு ஞானியின் அவதரிப்பையும், சிறிது கர்மா நிலுவையில் உள்ள ஞானியின் மறுபிறப்பு பற்றியும், அவர்களுக்கிடையே உள்ள  வேறுபாடுகளையும் விவரித்து உள்ளார்.

முடிவான முக்தி அடையாதவர்கள் பிறந்து, பாக்கியுள்ள கர்மபலன் கழிந்த பின்னர், 'ஏற்றம் பெற்று' முழுமையான முக்தி பெற்றவர் ஆகிறார்கள்.
இப்படிப்பட்ட மகான்கள் இவ்வுலகில், குறிப்பாக அவர்களின் சிஷ்யர்களின் ஆன்ம வளர்ச்சிக்காகத் திரும்பப் பிறக்கிறார்கள். அவர்கள் "ஜீவன் முக்தர்கள்" என்று அழைக்கப் படுகிறார்கள். அவர்களின் ஆற்றலால் மேம்படுவோர் எண்ணிக்கை குறைவாக இருக்கும், கணிசமானதாக இருக்காது.

மாறாக,முழுமையான முக்தி அடைந்தவர்கள், பெரும்பாலான மானிட சமுதாயத்தின் மேல் தன் அருட்சக்தியைப் பொழிந்து அவர்களை மேம்படுத்த, கடவுளின் முழுவெளிப்பாடான ஒரு அவதாரப்  புருஷராக உலகில் தோன்றுகிறார்கள். அவர்கள் "பரமமுக்தர்கள்" - கர்மவினைகளை முந்தைய பிறப்பிலேயே  முற்றிலும் கழித்தவர்கள். அத்தகையோரிடம்  சரணடைவோர் யாராகிலும் அழிவிலிருந்து காக்கப்பெற்று மேம்படுவது உறுதி.

"நீங்கள் ஒரு கடவுள் அவதாரமா?" என ஒருமுறை குருதேவரைக் கேட்டேன். அதற்கு அவர் அமைதியாக, "இப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த [உலகெங்கும் பயன்தரும்]  மார்க்கத்தைப் பரப்ப அவதார புருஷர் அல்லாத மற்றொருவரால் சாதிக்க இயலாது," எனக் கூறினார்.

குருதேவர் கைக் குழந்தையாக இருக்கும் போது. அவருடைய தாயார் பரமகுரு 'யோகாவதார்' லாஹிரி மகாசாயரைத் தரிசிக்க சென்றார். "இளம் தாயே, உன் குழந்தை ஒரு யோகி. அவன் ஒரு ஆன்மீக ரயில்வண்டி போல பல ஆன்மாக்களைக் கடவுளின் ராஜ்ஜியத்திற்கு ஏற்றிச் செல்வான்," என யோகாவதார் குருதேவரைப் பற்றி தாயாரிடம் தொலைநோக்கத்துடன் வாக்கருளினார். இப்படிப் பட்ட வார்த்தைகளின் வர்ணனை, அவதார புருஷர் ஒருவருக்கு மட்டுமே பொருந்தும்.

‪#‎Conversations‬ with Yogananda 087 by Swami Kriyananda
Tamil Translation: D.l. Sivakumar


ஓம் தத் ஸத்

பிரம்மார்ப்பணமஸ்து.

No comments:

Post a Comment